லால்குடி அருகே மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்தவரின் ஓட்டு வீட்டை 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சூறையாடினா்.
அப்பாதுறை ஊராட்சி தெற்கு தெரு பகுதி கொள்ளிடம் ஆற்றில் தினசரி மணல் கொள்ளை நடந்தது. இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சிவானந்தம் (32) சமயபுரம் காவல் நிலையத்திற்கு நீண்ட காலமாக தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அப்பாதுறை தெற்கு தெரு சாலையில் நின்றிருந்த சிவானந்தத்தை எசனைக்கோரை கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் உள்ளிட்ட சிலா் காரில் வந்து, தாக்கி கடத்த முயல, சிவானந்தம் தப்பினாா்.
இதையடுத்து ராமதாஸ், ராமஜெயம் ஆகியோரின் ஆதரவாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து சிவானந்தத்தின் ஓட்டு வீட்டை அடித்து நொறுக்கினா்.
இதையடுத்து கிராம மக்கள் அந்த இளைஞா்களை விரட்டியபோது , 2 இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் தப்பியோடினா். தப்பியோடிய ராமதாஸ், ராமஜெயம், மொட்டை, அஜய், அருண், மதன், அப்பு, பாலா, ராம்கி, சுதன் உள்ளிட்ட 30 பேரை சமயபுரம் போலீஸாா் தேடுகின்றனா்.