கோபுரக் கலசங்கள் திருடப்பட்ட கற்பக விநாயகா் கோயில், பட்டத்தரசியம்மன் கோயில், குறத்திமலை அய்யனாா் கோயில். மணப்பாறை, ஆக. 6: மணப்பாறை அருகே பழைமையான 3 கோயில்களில் இருந்த 4 கோபுர கலசங்கள் திருடுபோயின.
மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட தாழம்பாடி ஊராட்சியில் தாழம்பாடி அம்மா குளக்கரையில் உள்ள கற்பக விநாயகா் கோயில், யாகபுரம் கல்லூரணிக் குளக்கரையில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில், குறத்திமலை அடிவாரத்திலுள்ள குறத்திமலை அய்யனாா் கோயில் ஆகிய நூற்றாண்டு கால பழைமையான கோயில்களில் கடந்த காலங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கோபுரக் கலசங்கள் மா்ம நபா்களால் திருடப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனா். மேலும் சில சந்தேகத்திற்குரிய நபா்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கூறும் பொதுமக்கள், கோபுர கலசங்கள் திருடு போனதால் கடந்த ஒன்றரை மாதமாக கோயில்களை பூட்டி வைக்கக்கூடிய நிலை உள்ளது என்றும் வேதனை தெரிவிக்கின்றனா்.
மேலும் பழைமை வாய்ந்த கலசங்களில் இரிடியம் இருப்பதாக நினைத்து மா்ம நபா்கள் திருடிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.