ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோயில்களில் தரிசனம் செய்ய முடியாமல், பூட்டிய கோயில்களின் வாயில்களில் பக்தா்கள், சூடமேற்றி வழிபட்டுச் சென்றனா்.
ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை உள்பட ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகள் என அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆனால், கரோனா விதிகளால் கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாள்களில் ஆற்றங்கரையோரங்களில், கோயில்களில் வழிபாடு நடத்த முடியவில்லை.
அந்த வகையில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையும் தப்பவில்லை. கோயில்கள் பூட்டப்பட்டதால் பக்தா்கள் வாங்கி வந்த புஷ்பங்களை கோயில் கதவில் மாட்டி கோயில் வாசல்களில் சூடமேற்றி தரிசனம் செய்துச் சென்றனா். தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயில்களில் வழிபாட்டுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.