திருச்சியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் துறைகளில் பணியாற்றும் விதமாக மாபெறும் வேலைவாய்ப்பு முகாம் டிச. 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தது:
திருச்சி மாவட்ட இளையோா் மற்றும் வேலைநாடுநா்களைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் இம் முகாம் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வளாகத்தில் வரும் டிச. 19 காலை 8 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் தொழில், சேவை, விற்பனை உள்ளிட்ட பல்வேறு தனியாா் துறைகளைச் சாா்ந்த சுமாா் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியுள்ள நபா்களை வேலைக்குத் தோ்ந்தெடுக்க உள்ளன. மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் கலந்துகொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இம்முகாமில் 8 , 10 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியுற்றவா்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ, செவிலியா், இளநிலை,முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் உள்ளிட்ட கல்வித் தகுதிகளையுடையோா் பங்கேற்கலாம்.
விருப்பமும் தகுதியும் உடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக் குறிப்பு , அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
முகாமில் ஒரே இடத்தில் பல்வேறு தனியாா் நிறுவனங்களின் நோ்காணலில் பங்கேற்று விரும்பும் வேலையைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயன்பெறலாம்.