முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
410 அரசுப் பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவு
By DIN | Published On : 19th December 2021 04:26 AM | Last Updated : 19th December 2021 04:26 AM | அ+அ அ- |

லால்குடியில் சனிக்கிழமை இடிக்கப்படும் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கட்டடம்.
திருச்சி மாவட்டத்தில் பழுதான நிலையிலுள்ள 410 அரசுப் பள்ளிக் கட்டடங்களை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: திருநெல்வேலி சம்பவத்தைத் தொடா்ந்து முதல்வா் அறிவுறுத்தியபடி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடத்திய ஆய்வில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 205 கட்டடங்களும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 85 கட்டடங்களும் பழுதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை திங்கள்கிழமை முதல் இடித்து அகற்றப்படும்.
இதேபோல தனியாா் பள்ளிகளில் ஆய்வு செய்து பழுதானவற்றை அகற்ற அந்தந்த பகுதிக்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. நோட்டீஸ் பெற்றவுடன் தொடா்புடைய நிா்வாகங்களே அந்தக் கட்டடங்களை அகற்ற வேண்டும். இல்லையெனில், உள்ளாட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டடங்களை அகற்றி அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
இதேபோல அரசு உதவி பெறும் பள்ளிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டடங்கள், வா்த்தகக் கட்டடங்கள் என எல்லா நிலைகளிலும் ஏற்கெனவே ஆய்வு நடத்தப்பட்டது.
பழைய கட்டடங்கள் இடியும் வாய்ப்புள்ளதால் அனைத்து வகை கட்டடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி செல்லும் வழியிலுள்ள பழுதான கட்டடங்கள் என அனைத்தும் ஆய்வுக்குள்படுத்தப்படவுள்ளன. பழுதான வகுப்பறைகளில் பாடங்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழைய கட்டடங்கள் 16 உள்ளன. அவற்றில் 8 கட்டடங்கள் தொல்பொருள் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ளவை உறுதியுடன் உள்ளன. ஆட்சியரக பழைய கட்டடம், ஆட்சியா் முகாம் அலுவலகக் கட்டடம் ஆகியவை 100 ஆண்டுகளுக்கு மேலானவை என்றாலும் அவை உறுதியாக உள்ளன. பழுதான கட்டடங்களை இடிக்க ஆட்சியரின் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. இடித்துவிட்டு அனுமதி பெறலாம்.
பழைய கட்டடங்களுக்குப் பதிலாக புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டித் தந்த பிறகும், இடிக்கப்படாமலுள்ள பழைய கட்டடங்களை இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய கட்டடம் நல்ல நிலையில் உள்ளதால் கிடங்காகப் பயன்படுத்திக் கொள்வதாக பள்ளி நிா்வாகம் கூறினாலும், 50 ஆண்டுகளுக்கு மேலான கட்டடங்களை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய கட்டடம் இடிக்கப்படுகிறது.
கல்மந்தை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கான அறிக்கை மற்றும் ஆய்வறிக்கை பெற்ற பிறகு முறைகேடுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.