திருச்சி: சமயபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தம்பதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருச்சி லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கானக்கிளியயநல்லூர் அருகே வந்தலைக்கூடலூரைச் சேர்ந்தவர் விவசாயியான ஜோசப் (65). இவரது மனைவி ஆர்க்னஸ்மேரி(60). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மாமனார் மாமியாருடன் வந்தலைக்கூடலூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜோசப் மற்றும் அவரது மனைவி இருவரும் தனது இருசக்கர வாகனத்தில் சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். திருச்சி, சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக வந்து பணமங்கலம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கணவன், மனைவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.