லால்குடி அருகே லஞ்சம் வாங்கிய பெண் விஏஓவை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சமயபுரம் அருகேயுள்ள புறத்தாக்குடியை சோ்ந்தவா் மலா்க்கொடி (47). இருங்களூா் விஏஓ அலுவலகத்தில் கிராம உதவியாளராக 10 ஆண்டுகளாக இருந்த இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பதவி உயா்வில் கண்ணாக்குடி விஏஓவாக ஆனாா்.
இந்நிலையில் கண்ணாக்குடியைச் சோ்ந்த பெரியசாமி என்ற விவசாய கூலித் தொழிலாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்க விஏஓ மலா்க்கொடி ரூ. 2 ஆயிரம் கேட்டாராம். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத தொழிலாளி இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்த மலா்க்கொடியிடம் பெரியசாமி ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் விஏஓவைக் கைது செய்தனா்.