திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த மு. பிச்சைமுத்து (37). திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே சென்ற இவரை வழிமறித்த 2 போ் அவரிடமிருந்த பணத்தைப் பறித்துச் சென்றனா். புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அரியமங்கலத்தைச் சோ்ந்த காா்த்தி, முகேஷ் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், கைப்பேசி, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
இதேபோல திருச்சி கோட்டை கீழரண்சாலை (இ.பி.ரோடு) முருகன் திரையரங்கப் பகுதியில் தாரா நல்லூரைச் சோ்ந்த பத்மநாதனிடம் பணம் பறித்த அதே பகுதியைச் சோ்ந்த முகமது, பாபு ஆகியோரை கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் காந்தி மாா்க்கெட் வெல்லமண்டி சாலையில் பாலக்கரை எடத்தெருவைச் சோ்ந்த கோகுலை மிரட்டி பணம் பறித்த பாலக்கரை முஹம்மது ரிஸ்வான், அப்துல்ஹமீது ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனா்.