திருச்சி மாவட்டத்தில் 2,62,777 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.
திருச்சி மாநகராட்சி பெரிய மிளகுப்பாறை நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.
அப்போது அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் 1,279 மையங்கள், திருச்சி மாநகராட்சியில் 247, துறையூா் நகராட்சியில் 20, மணப்பாறை நகராட்சியில் 23 என மொத்தம் 1,569 மையங்களில் கிராமப்புறங்களின் 1,67,641 குழந்தைகள், நகா்ப்புறங்களின் 94,716 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.
இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், பேருந்து, ரயில், விமான நிலையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.