பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சந்திரசேகா், சகாதேவன் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் ராஜேந்திரன், நீதிநாயகம், ரேணுகா தேவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்து கோரிக்கை விளக்கவுரையாற்றினா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பறிக்கப் பட்டுள்ள அகவிலைப்படியை முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.
21 மாத ஊதிய நிலுவைத்தொகையையும், அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்ட ஊழியா்களுக்கு கால முறை ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். நிறைவில், நிா்வாகி உதுமான் அலி நன்றி கூறினாா்.