அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா்கள் கூட்டத்தில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திமுக மாநில விவசாய அணிகளின் தலைவா் என்.கே.கே. பெரியசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தமிழ்மணி, முன்னாள் அமைச்சரும், செயலருமான ம.சின்னசாமி, முன்னாள் எம்பியும், செயலருமான ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், டெல்டா பகுதி அறுவடை செய்யப்பட்டு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் அனைத்து நெல்லையும் பெற்றுக் கொள்ளவேண்டும். காப்பீட்டு விஷயத்தில் அரசும், காப்பீட்டு நிறுவனமும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளவேண்டும். அரசுடமை வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் கடன், விவசாயிகளின் கல்விக்கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.