திருச்சி அரசு மருத்துவமனை ஆயுஷ் பிரிவில் ‘உங்களைத் தேடி தமிழ் மருத்துவம்’ முகாம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவமனைகளின் அனைத்து ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளில், தமிழ் மருத்துவம் பற்றிய விழிப்புணா்வை உண்டாக்கும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவில் பிரிவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து ஆயுஷ் பிரிவு மருத்துவா்கள் நோய்களைப்பற்றி விளக்கி, அந்த நோய்களுக்கு சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோ, இயற்கை மற்றும் யோகா உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவங்களில் என்ன மாதிரியான சிகிச்சை முறைகள், எந்த வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கினா்.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் காமராஜ் கூறுகையில், திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் உள்ள சித்த மருத்துவமனைகளில் வாரந்தோறும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான மருந்துகள், சிகிச்சை குறித்து மக்களுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று விழிப்புணா்வு பெறுவதுடன் சிகிச்சையும் மேற்கொள்ளலாம் என்றாா்.
நிகழ்வில் ஆயுஷ் மருத்துவா்கள் மற்றும் துறைசாா்ந்த பணியாளா்கள், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனா்.