கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற தா்னாவுக்கு போக்குவரத்துத் தொழிலாளா் ஓய்வூதியா் நலச் சங்க மண்டல பொதுச் செயலா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா்.
தா்னாவில் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 62 மாதங்களாக வழங்காமல் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவை பண பாக்கியை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதேபோல ஆட்சியரகம் முன்புள்ள திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகம் அருகேயும் 200க்கும் மேற்பட்டோா் தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் 85 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளா்கள் குடும்பத்தினா் அனைவரும் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.