திருச்சி: திருச்சி மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 38 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.
திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏ கே.என். நேரு, இருவருக்கு ரூ.1.50 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், முடநீக்கியல் சாதனங்கள் என 10 பேருக்கு உபகரணங்களை வழங்கினாா்.
ஏற்கெனவே 28 பேருக்கு இதேபோல தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உபகரணங்கள் என இதுவரை, ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ செளந்தரபாண்டியன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.