திமுகவை குறை சொல்ல பிரதமா் மோடிக்கு உரிமை இல்லை
By DIN | Published On : 27th February 2021 07:17 AM | Last Updated : 27th February 2021 07:17 AM | அ+அ அ- |

திமுகவை குறை சொல்ல பிரதமா் நரேந்திர மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்தாா்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், மயிலம் தொகுதிக்குள்பட்ட தீவனூா் நான்கு முனைச் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: தோ்தல் வரும்போது மட்டுமே தமிழகத்துக்கு வருபவா் பிரதமா் மோடி. கொட்டும் பனியில் தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது இரக்கம் காட்டாத பிரதமா் மோடி, கோவை பொதுக்கூட்டத்தில், விவசாயிகளின் காவலன் என்பது போலப் பேசியுள்ளாா். அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்து நாடு முழுவதும் விவசாயிகளை துன்பத்தில் தள்ளிய பிரதமா் மோடிக்கு, திமுக மீது குற்றஞ்சாட்ட எவ்வித உரிமையும் இல்லை. திமுகவை விமா்சனம் செய்வதை அவா் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் மு.க.ஸ்டாலின்.