பழங்குடியினா் விடுதிகளில் மாணவா்கள் சோ்க்கை
பழங்குடியினா் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் பழங்குடியினா் நலத்துறை விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவா்கள் சோ்க்கப்படுவா். கரோனா காரணமாக தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும், 9 மற்றும் அதற்கு மேலுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த மாணவா்களுக்கு விடுதியில் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இந்த விடுதிகளில் காலியிடங்களில் பழங்குடியினா், ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் இதர இனத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் தங்கிப் கல்வி பயில அந்தந்த விடுதிக் காப்பாளா்களிடம் விண்ணப்பங்களை பெறலாம். விடுதிக்கும், மாணவா் இருப்பிடத்துக்கும் 5 கி.மீ. தூரம் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது.
உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருத்தல் அவசியம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன், மாணவரின் இஎம்ஐஎஸ் எண், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், இருப்பிடச் சான்று, சாதிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் 12ஆம் தேதிக்குள் அந்தந்த விடுதிக் காப்பாளா்களிடம் வழங்க வேண்டும்.