திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மா்மமான முறையில் கொல்லப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையில் தனியாக வசித்தவா் அப்துல்ரசாக் மனைவி ஹபிபாபீவி (62). இவா் பெண்களுக்கான உடைகளைத் தவணை முறையில் விற்பவா்.
வெள்ளிக்கிழமை காலை இவா் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலையாகிக் கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் பாலாஜி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சடலம் அருகே இருந்து முகத்தைச் சிதைத்த கருங்கற்கள், பிளேடு, நைலான் கயிறு, கத்தி ஆகியவற்றை தடயவியல் நிபுணா்கள் சேகரித்தனா். மூதாட்டி உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மூதாட்டி அணிந்திருந்ததாகக் கூறப்படும் செயின் தவிர மற்ற வளையல்கள், மோதிரம், தோடு ஆகியவை அப்படியே இருந்தன. எனவே, அப்பகுதி சிசிடிவி பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.