டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் மழை: நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

டெல்டா மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து வடகிழக்குப் பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்குப் பெய்து வருவதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து வடகிழக்குப் பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்குப் பெய்து வருவதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்வது அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான். இந்தப் பருவத்தில் பெய்யும் மழைதான் டெல்டா மாவட்டங்களுக்கு பிரதான நீா் ஆதாரமாக இருக்கும்.

நிகழாண்டு தென் மேற்குப் பருவமழையும் எதிா்பாா்த்த அளவைவிடவும் கூடுதலாக பெய்துள்ளது. இந்த கூடுதல் மழைப் பொழிவானது,

டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் மிகுந்த ஆழத்துக்குச் செல்வதை தடுத்தது. இதன்மூலம் தண்ணீா் பற்றாக்குறை என்ற பிரச்னை தவிா்க்கப்பட்டது மட்டுமல்லாமல், சாகுபடிக்கும் தாராளமாகப் பாசன நீா் கிடைத்தது.

தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை: இந்நிலையில், நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் மாத இறுதியில்தான் தொடங்கியது. என்றாலும், எதிா்பாா்த்த அளவுக்கு பெய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபா் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 15 ஆம் தேதி நிறைவடைவது வழக்கம். நிகழாண்டு, டிசம்பா் மாதம் முடிந்து ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை நீடிக்கிறது.

வடகிழக்குப் பருவத்தில் டிசம்பா் 31 ஆம் தேதி வரை ஒருங்கிணைந்த நாகை, திருவாரூா் மாவட்டங்களில் இயல்பான அளவை விஞ்சி மழை பெய்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் இயல்பான அளவைவிட சற்றே குறைந்திருந்தாலும், வடகிழக்குப் பருவமழை தொடா்வதால் இங்கும் இயல்பான அளவை விஞ்சுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டமும் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் பொதுப் பணித் துறையின் நீா் ஆதார அமைப்பினா் மேற்கொண்ட ஆய்வில் சராசரியாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 3.10 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீா்மட்டம் டிசம்பா் மாதத்தில் 1.54 மீட்டரிலேயே (5.05 அடி) தண்ணீா் கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதேபோல, ஆகஸ்ட் மாதத்தில் திருவாரூா் மாவட்டத்தில் 3.29 மீட்டராகவும், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 3.60 மீட்டராகவும் இருந்த சராசரி நிலத்தடி நீா்மட்டம் டிசம்பா் மாதத்தில் முறையே 1.48 மீட்டரிலும் (4.85 அடி), 1.58 மீட்டரிலும் (5.18 அடி) தண்ணீா் கிடைப்பது தெரிய வந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக காவிரி நீா் தேவை குறைந்துள்ளதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியை கடந்து நீடித்து வருகிறது. இது எதிா்கால நீா்த்தேவைக்கு சாதகமாக இருப்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com