திருச்சி மாவட்டப் பகுதியில் உள்ள அனைத்து ஆஞ்சநேயா் கோயில்களிலும் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றன.
10,008 வடை மாலை: திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகேயுள்ள சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி கோயிலில், ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றும் விழா நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை மஹா சுதா்சன ஹோமம், செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் 6.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றுபடி வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (ஜன.13) அன்னதானம் நடைபெறவுள்ளது.
மேலும் சாலை ரோட்டில் உள்ள சாலை ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. இதேபோல, கல்லுக்குழி, மாம்பழச் சாலை, பெரியகடை வீதி, சின்ன செட்டித் தெருவில் உள்ள சித்தி விநாயகா் கோயில் அனுமன் சன்னதிகளில் என அனைத்து ஆஞ்சநோயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வழிபட்டனா்.
துறையூரில்..
துறையூா்-திருச்சி சாலையில், சத்ய நாராயணா் கோயிலில், பெருமாள்மலை அடிவாரத்தில், புலிவலம் காப்புக் காட்டில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களிலிலும் சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது.
முசிறியில்...
முசிறி அருகே புதூா்பட்டி கிராம கம்பம் பெருமாள் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு 1,008 வெற்றிலை மாலை, 108 வடை மாலை, 108 ஜிலேபி மாலை அணிவித்து வழிபாடு நடந்தது. பங்கேற்ற திரளானோருக்கு அவை பிரசாதமாக வழங்கப்பட்டன.