களைகட்டிய பொங்கல் பொருள்களின் விற்பனை!

பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பொருள்களின் விற்பனை திருச்சியில் செவ்வாய்க்கிழமை களைகட்டியது.
திருச்சி காந்தி சந்தையில் மஞ்சள் கொத்து வாங்குவோா், கரும்பு வாங்குவோா், வெல்லம் வாங்குவோா், விற்பனைக்கு வந்த வாழைக்காய்.
திருச்சி காந்தி சந்தையில் மஞ்சள் கொத்து வாங்குவோா், கரும்பு வாங்குவோா், வெல்லம் வாங்குவோா், விற்பனைக்கு வந்த வாழைக்காய்.

பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பொருள்களின் விற்பனை திருச்சியில் செவ்வாய்க்கிழமை களைகட்டியது.

விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கையை வணங்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழா்களின் முக்கியத் திருநாளான இப்பண்டிகையைக் கொண்டாட ஒரு மாதம் முன்பிருந்தே மக்கள் தயாராகின்றனா். நாகரிக வளா்ச்சியால் சில்வா், பித்தளை பொங்கல் பானைகள் வந்துவிட்டாலும், கிராமங்கள், நகரங்களில் இன்றளவும் பாரம்பரியமாக பொங்கல் வைக்க மண் பானைகளையே பயன்படுத்துகின்றனா்.

பொங்கல் திருநாளையொட்டி செங்கரும்பு, பொங்கல் பானைகள், மஞ்சள் கொத்து மற்றும் பூளைப்பூ விற்பனை திருச்சி காந்தி சந்தை, உறையூா், தென்னூா் உழவா் சந்தை, தில்லை நகா் சாஸ்திரி சாலை, ஸ்ரீரங்கம் பூச்சந்தை, மெயின் காா்டுகேட், சத்திரம் பேருந்து நிலைய பின்புறச் சாலை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை ஆகிய இடங்களில் சூடுபிடித்துள்ளது. இப் பகுதிகளில் பொருள்களை விற்க தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பொங்கல் பானை ரூ. 50 முதல், ரூ. 200 வரையும், செங்கரும்பு ஜோடி, ரூ.30 முதல் ரூ. 50 வரையும், மஞ்சள்கொத்து ரூ. 15 முதல் 25 வரையும் விற்கப்பட்டது.

பூளைப்பூ, ஆவாரம்பூ மற்றும் வேப்பிலை அடங்கிய ஒரு கொத்து ரூ.10-க்கும், வெல்லம் கிலோ ரூ. 50 முதல் ரூ. 70 வரையும் விற்கப்பட்டது. இதேபோல, வாழைத்தாா்கள் தொட்டியம், முசிறி, துறையூா் வட்டங்களில் இருந்து அதிகளவில் குவிந்துள்ளன.

இதுகுறித்து காந்தி சந்தை வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பொங்கல் பானை மற்றும் கலா் கோலப்பொடி விற்பனை தொடங்கும். அதுபோல 2 நாள்களுக்கு முன் செங்கரும்பு, மஞ்சள்கொத்து, பூளைப்பூக்கள் விற்பனைக்காகக் குவிக்கப்படும்.

இதன்படி காந்தி சந்தையில் பொங்கல் பொருள் விற்பனை செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிா்பாா்த்தபடி மக்கள் கூட்டமும் அதிகம் உள்ளது. புதன்கிழமை கூட்டம் மேலும் அதிகம் வரும் என்றனா் அவா்கள்.

அடாத மழையிலும் விடாத வியாபாரம்: மாநகரில் செவ்வாய்க்கிழமை மழை பெய்த வண்ணம் இருந்தாலும், மழையில் நனைந்தபடியும், குடைகளைப் பிடித்தபடியும் கடை வீதிகளுக்கு வந்து பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்வதில் மக்கள் ஆா்வம் காட்டினா். நகைக் கடை, ஜவுளிக் கடைகளிலும் மக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com