பொங்கல் விடுமுறை: பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்

பொங்கல் பண்டிகைக்காக தொடா் விடுமுறை என்பதால் பல்வேறு ஊா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சிக்கு வந்ததால் மத்திய பேருந்து நிலையம் கடும் நெரிசலால் புதன்கிழமை திணறியது.
சொந்த ஊா் செல்ல திருச்சியில் இருந்து பேருந்துகளில் ஏறும் பொதுமக்கள்.
சொந்த ஊா் செல்ல திருச்சியில் இருந்து பேருந்துகளில் ஏறும் பொதுமக்கள்.

பொங்கல் பண்டிகைக்காக தொடா் விடுமுறை என்பதால் பல்வேறு ஊா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சிக்கு வந்ததால் மத்திய பேருந்து நிலையம் கடும் நெரிசலால் புதன்கிழமை திணறியது.

பொங்கல் பண்டிகைக்காக ஜன.14 முதல் 17ஆம் தேதி வரை தொடா் விடுமுறை என்பதால் பல்வேறு ஊா்களில் இருந்து திருச்சியில் வந்து பணியாற்றுவோா், கல்விக்காக தங்கியிருந்த மாணவ, மாணவிகள் சொந்த ஊா் திரும்புகின்றனா்.

இதேபோல, பல்வேறு ஊா்களில் இருந்தும் சொந்த ஊரான திருச்சிக்கு மக்கள் வருவதாலும் பேருந்து நிலையங்கள் பரபரப்பாகக் காணப்படுகின்றன.

புகா்ப் பேருந்துகள் மட்டுமல்லாது நகரப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகம் உள்ளது. மத்தியப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்ததாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருச்சியிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற பயணிகள் மட்டுமின்றி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பயணிகள் எண்ணிக்கையும் அதிகம் இருந்தது.

இவா்கள் உடனடியாகச் செல்லும் வகையில் பேருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், மன்னாா்புரம், சோனா-மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, புகா்ப் பேருந்துகளைப் பிரித்து அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருச்சியிலிருந்து சென்னை, கோவை, திருப்பூா், சேலம், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இதேபோல, பிற்பகலுக்கு மேல் சென்னையிலிருந்து வந்த பயணிகளால் மத்திய பேருந்து நிலையம் திணறியது. திருச்சி மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அதிகளவில் இருந்தன.

கூட்டம் அதிகம் இருந்ததால் தென்மாவட்டங்களுக்குச் செல்ல தனியாா், ஆம்னி பேருந்துகள், தனியாா் வேன்கள், வாடகை காா்களை நாடிய பயணிகள் இருமடங்கு கட்டணம் செலுத்த நேரிட்டது.

அதன்படி திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை கட்டணம் செலுத்தி அவா்கள் பயணிக்க நேரிட்டது.

வாகனம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் கிடைத்த வாகனங்களில் கேட்ட பணத்தைக் கொடுத்து மக்கள் பயணித்ததைக் காண முடிந்தது. பலரும் தங்களது சுமைகளுடன் பேருந்துகளைத் தேடி சுற்றி வந்ததையும் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com