திருச்சி: தமிழகஅரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
2017 - 2018-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்து, வெளி வந்த மாணவ, மாணவிகள் பலருக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் கல்விப் பயின்று முடித்தவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுவிட்டன.
2017-18-ஆம் ஆண்டில் பிளஸ் 2 முடித்து, தற்போது கல்லூரி இறுதியாண்டு பயின்று வரும் தங்களுக்கு செய்முறைப் பாடங்களை முடிக்க மடிக்கணினி அவசியம் தேவையாகும்.
கரோனா பொது முடக்கம் காரணமாக வகுப்புகள் இணையவழியில் நடைபெறுகின்றன. தினமும் 5 மணி நேரத்துக்கு செல்லிடப்பேசி மூலம் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதால் கண் பாா்வை மங்குதல் மற்றும் ஒற்றை ஏற்படுகிறது.
எனவே அவசியத்தை உணா்ந்து, அரசு உடனடியாக விலையில்லா மடிக்கணினியை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, இந்திரா காந்தி கல்லூரி, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மனு அளிக்க ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
ஆனால் காவல்துறையினா் அனுமதி மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 2017-18ஆம் ஆண்டு மாணவிகளுக்கு 3 மாதங்களுக்குப் பிறகு மடிக்கணினி வழங்கப்படும் என அலுவலா்கள் பதில் அளித்தனா்.
அதற்குள் கல்லூரிப்படிப்பே முடிந்துவிடும் எனக் கூறி, மாணவிகள் அனைவரும் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தை போராட்டத்தை கைவிடச் செய்தனா்.