லால்குடி: திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதி லட்சுமணாநகரைச் சோ்ந்தவா் ஜான்மைக்கேல் மகன் ஸ்டான்லி மைக்கேல் (46). இவா் சென்னை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குநராக இருந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை திருச்சி கிராப்பட்டியில் வசிக்கும் தனது சகோதரியை அரசு வாகனத்தில் வந்து பாா்த்து விட்டு, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூா் அடுத்த நெடுங்கூா் பகுதியில் சென்றபோது இவா் ஓட்டி வந்த வாகனம் முன்னால் சென்ற லாரி மீது திடீரென மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த சிறுகனூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, லாரி ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனா்.