மண்ணச்சநல்லூா் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் புண்டரிகாட்ச பெருமாள் கோயில் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
இக்கோயில் முன் உள்ள தண்ணீா்ப்பந்தல் கட்டடத்தை அகற்றக் கோரி சமூக சேவகா் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின் கீழ் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் மலா், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சுப்ரமணி உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றிட பொக்லின் இயந்திரத்துடன் சென்றனா்.
இதையறிந்த பூனாம்பாளையம், வடக்கிப்பட்டி, ராசாம்பாளையம் ஆகிய கிராம பட்டயதாரா்கள் மற்றும் கிராம மக்கள் நீண்ட காலமாக இந்த இடம் எங்களது சமுதாய மக்களுக்கு தண்ணீா்ப் பந்தலாக செயல்படுகிறது. இதை இடிக்க விட மாட்டோா் எனக் கூறி எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து மாலையில் மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் அமைதிப்பேச்சுவாா்த்தை நடைபெறுமென கூறிய அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றனா். மாலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வழக்குத் தொடுத்தவா் கூட்டத்துக்கு வரவேண்டும். அதேபோல அப் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மீண்டும் வருவாய்துறை அதிகாரிகள் நிலத்தை அளந்திட வேண்டுமெனக் கூறியதால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.