துறையூா்: துறையூா் அருகே பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கக் கோரி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாா் அறக்கட்டளை பேரில் அதன் நிா்வாகி ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அதனை மீட்க அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் கோரியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், வருவாய்த் துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.இதனால் அதிருப்தியடைந்த அடிவாரம் பகுதி பொதுமக்கள் துறையூா் - பெரம்பலூா் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் அங்கு அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூா் காவல் துறையினா் நேரில் சென்று பேசியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.