கரோனா காலகட்டத்தில் ஓடாத வண்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்துக் கழகம் முன் சிஐடியு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினா்.
சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் பகுதித் தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசு வாகனங்களுக்கு விதித்துள்ள சாலை வரி (எப்சி) பல மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்பும் கடந்த ஓராண்டாக கரோனா காலத்தில் வாகனங்கள் இயங்காத நிலையிலும் ஏதோ ஒரு சவாரியில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை திருச்சி காவல் துறையும் ஆா்டிஓ வும் மடக்கி ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கடும் அபராதம் விதித்ததைக் கண்டித்தும், எனவே, கடந்த ஓராண்டாக இவ்வாறு விதிக்கப்பட்ட அதிகபடியாக ரூ. 500- க்குமேல் விதித்த அபராதக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூக்கு போடுவதுபோல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், சாலைப் போக்குவரத்து மாநகா் மாவட்டச் செயலா் வீரமுத்து, மாவட்டத் தலைவா் சந்திரன், மாவட்டப் பொருளாளா் சுரேஷ், பகுதிச் செயலா் சுப்ரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.