சமயபுரம் பகுதியில் பாலங்கள் அமைக்க எம்எல்ஏ ஆய்வு
சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புள்ளம்பாடி வாய்க்காலில் ரூ. 10.40 கோடியில் பாலப்பணிகள் நடைபெறவுள்ள இடத்தை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
சமயபுரம் கோயிலுக்கு விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது; புள்ளம்பாடி வாய்க்கால் பாலங்கள் மிகவும் குறுகியதாகவும், வலுவிழந்து இடியும் தருவாயிலும் உள்ளதாக அப் பகுதி மக்கள் மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ கதிரவனிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதன்படி ச. கண்ணனூா் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்கால்களில் பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
புள்ளம்பாடி வாய்க்காலில் பாலம் கட்டும் இடமான நரசிங்கமங்கலம், சேனையா் கள்ளிக்குடி, அண்ணாநகா் மற்றும் பெருவளை வாய்க்காலில் பாலம் கட்டும் இடமான இனாம் சமயபுரம், மாணிக்கபுரம் ஆகிய 5 இடங்களில் மொத்தம் ரூ. 10 .40 கோடியில் பாலம் கட்டப்படும் இடங்களை பேரூராட்சி அதிகாரிகளுடன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து ச. கண்ணனூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா பாதுகாப்பு உடை, கையுறை, முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினாா்.
நிகழ்வில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் (பொ ) என்.விஸ்வநாதன், ச. கண்ணூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலமுருகன், தலைமை எழுத்தா் கரும்பாச்சலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.