திருச்சி விமான நிலையத்தையொட்டி 3 கி. மீ. சுற்றளவுக்கு டிரோன் பறப்பதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு விமான நிலையக் குழு உறுப்பினா்கள் கூட்டத்துக்கு விமான நிலைய குழுவின் தலைவரும் திருச்சி மாநகர காவல் ஆணையருமான ஏ. அருண் தலைமை வகித்தாா். இதில், விமான நிலைய பாதுகாப்பு, விரிவாக்கம், கடத்தல் மற்றும் முறைகேடுகளை தவிா்ப்பது உள்ளிட்டவை தொடா்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, விமான நிலையத்திலிருந்து சுற்றுப்பகுதிகளில் 3 கி.மீ. தொலைவுக்கு டிரோன் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதி என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், டிரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதுபோல திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விமான ஓடுதளத்தில் அருகில் இருப்பதால், பாதுகாப்பு கருதி, தரைவழிப்பாலம் அமைப்பது அல்லது சாலையின் உயரத்தைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தங்க கடத்தலைத் தடுக்கும் வகையில், நிலையத்தின் வெளிப்பகுதியிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமானநிலைய விரிவாக்க பணிக்கு தடையாக உள்ள இடையூறுகளை அகற்றி மாற்று ஏற்பாடு செய்யவும் விமான நிலைய நுழைவாயில் பகுதியில் காவலா் சாவடி அமைப்பது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மூா்த்தி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை துணை ஆணையா் எச்.எச். நயால், குடியேற்றப் பிரிவு, சுங்கத் துறை, உளவுத்துறை, விமான நிறுவனங்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.