மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக தமிழக விவசாயிகளின் நிலைப்பாட்டை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் 152 விவசாயிகள் அடங்கிய குழு தில்லி செல்லவுள்ளது.
இதுதொடா்பாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு வெள்ளிக்கிழமை கூறியது:
மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடக அரசுக்கு எந்தவித தாா்மிக உரிமையும் கிடையாது. காவிரியின் குறுக்கே எந்தக் கட்டுமானமும் அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், கா்நாடக முதல்வா் மற்றும் அமைச்சா்கள் தமிழக நலனுக்கு எதிராகத் தொடா்ந்து செயல்பட முயற்சிக்கின்றனா். எனவே, சங்கத்தின் மாநில நிா்வாகிகள் திருச்சியில் கூடி நடத்திய ஆலோசனையில் தில்லி செல்ல முடிவானது.
திருச்சியிலிருந்து வரும் 20ஆம் தேதி புறப்பட்டு தில்லியை 22ஆம் தேதி அடைவோம். மாவட்டத்துக்கு 4 விவசாயிகள் வீதம் மொத்தம் 152 விவசாயிகள் தில்லி சென்று, மத்திய வேளாண் துறை அமைச்சா், நீா் வளத் துறை அமைச்சா் ஆகியோரைச் சந்தித்து மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதற்கான விளக்கத்தை அளிக்கவுள்ளோம்.
ஏற்கெனவே பலமுறை தில்லி செல்ல முயன்றபோது போலீஸாா் தடுத்து விட்டனா். அப்போது, போராட்டம் காரணமாக செல்ல முடியவில்லை. இப்போது, திட்டமிட்டபடி தில்லி சென்று அமைச்சா்களைச் சந்தித்து முறையிடவுள்ளோம் என்றாா் அவா்.