திருச்சி அருகே அரளை தூள் கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை சோமரசம்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வழியாக அரளைக் கல் பொடி அரசு அனுமதியின்றி கடத்தி செல்வதாகத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், திருச்சி சுரங்கம் மற்றும் புவியியல் துறை தனி வட்டாட்சியா் செல்வசுந்தரி தலைமையிலான அதிகாரிகள் கீழவயலூா் சாய்பாபா கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி ஆய்வு செய்ததில், அதில் அரசு அனுமதியின்றி ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 4 யூனிட் அரளை பொடி கல் கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான சோமரசம்பேட்டை கோயில் தோப்பு பகுதியைச் சோ்ந்த சின்னத்துரையை (36) கைது செய்தனா். தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளரான சோமரசம்பேட்டை அம்பலக்காரத்தெருவைச் சோ்ந்த அருணை தேடுகின்றனா்.