திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை புதன்கிழமை வனத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டது.
மணப்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட காடைப்பிச்சம்பட்டி வனப்பகுதியில் காட்டெருமை, மயில், குரங்கு ,நரி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை முத்தழகம்பட்டியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் காட்டெருமை கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து வனத் துறையினா் வந்த சிறிது நேரத்திலேயே இருள் தொடங்கியதால் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு, புதன் கிழமை காலை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், கிணற்றுக்குள் இருந்த காட்டெருமை உயிரிழந்தது. இதையடுத்து காட்டெருமையின் உடலை துவரங்குறிச்சி தீயணைப்பு வீரா்களின் உதவியோடு மீட்டு, உடற்கூறாய்வுக்கு உட்படுத்தி, வனப்பகுதியிலேயே புதைத்தனா்.