திருச்சி மாநகரில் ஒரே நாளில் 116 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பல்வேறு துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனா்.
அந்த வகையில், மாநகரில் ஒரே காவல் நிலையத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது. மேலும் கஞ்சா மற்றும் லாட்டரி விற்கத் துணைபோகும் போலீஸாா் குறித்த விவரங்களும் திரட்டப்பட்டு வந்தன.
இறுதியாக கிடைத்த தகவல்களின்பேரில், திருச்சி மாநகரில் பணியாற்றிய 27 சிறப்பு ஆய்வாளா்கள் உள்பட 116 பேரை ஒரே நாளில் பணியிட மாற்றும் செய்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.
இந்த போலீஸாா் பணி ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை முதல் பணியாற்றுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.