குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்கு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்களாக நியமிக்கப்படுவதற்காக, தகுதி வாய்ந்த சமூகப் பணியாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவிலிருந்து ஒரு பெண் உள்பட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபா்கள், குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவராக அல்லது குழந்தை உளவியல், சட்டம், சமூகப் பணி, சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றவா்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா்களாவா். ஆனால், தொடா்ந்து பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்டக் குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்1, முதல் தளம், கலையரங்க வளாகம், மெக்டொனால்ஸ் சாலை, திருச்சி-1 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2413055 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது.