துறையூர் அருகே சிறுத்தை தாக்கியதாக கூறி 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆங்கியம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து அந்த கிராம மக்கள் ஆங்கியம் - கோனேரிப்பட்டி செல்லும் வழியில் உள்ள குன்று அருகே திரண்டு சிறுத்தை உலவுகிறதா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் புதரிலிருந்து திடீரென சிறுத்தை வெளிப்பட்டு கூட்டத்தில் இருந்த ஆங்கியம் உ. துரைசாமி(65) மீது பாய்ந்து அவரை கீழேத் தள்ளியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், அதேப்போல் ம. ஹரிபாஸ்கரின்(20) கையைக் கடித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அக்கிராமத்தினர் இருவரையும் அருகிலுள்ள தா.பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தகவலறிந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா, கூண்டு ஆகியவற்றுடன் ஆங்கியம் பகுதிக்கு சென்று சிறுத்தையை பிடிக்க முகாமிட்டுள்ளனர்.