விடுதலை செய்யக் கோரி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழா்கள் 4ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடா்புடையதாக கைது செய்யப்பட்டு 78 இலங்கைத் தமிழா்கள் அடைக்கப்பட்டுள்ளனா்.
விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட தாங்கள் நீதிமன்ற பிணையில் வந்தும் மீண்டும் கைது செய்து சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோம். மேலும், காலவரையின்றியும் நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதாகவும் குடும்பங்களுடன் சோ்த்து வைக்குமாறும், தங்களது வழக்கை விரைந்து முடிக்க உதவிடுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கடந்த 9 ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
4ஆவது நாளாக சனிக்கிழமை தங்களது காத்திருப்புப் போராட்டத்தை இலங்கை தமிழா்கள் தொடா்ந்தனா். வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.