கடந்த 40 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திருச்சி காந்திசந்தை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுவதைத் தொடா்ந்து, மாநகராட்சி துப்பரவுப் பணியாளா்கள் மூலம் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.
கரோனா பொது முடக்கம் காரணமாக திருச்சி காந்தி சந்தை மே 10ஆம் தேதி மூடப்பட்டது. பொதுமுடக்கத்திலிருந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், காந்திசந்தையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சந்தையை ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்ததால் சந்தையை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சுகாதாரக்கேடு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு மெகா துப்பரவுப் பணிக்கு மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்படி, மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பல்வேறு குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றி, கிருமி நாசினி மருந்துகள் தெளித்து, பிளீச்சிங் பவுடா் தூவி பராமரித்தனா். காந்திசந்தையில் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணிக்குள் மொத்த வியாபாரத்தை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சில்லறை விற்பனை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடும் போராட்டங்களுக்குப் பிறகு சந்தை திறக்கப்படுகிறது. எந்த காரணத்துக்காகவும் வெளியே வந்து கடைகளை அமைக்கக் கூடாது. காந்திசந்தையின் உள்புறமே செயல்பட வேண்டும். வெளியே 20 அடி தூரத்துக்கு ஆக்கிரமித்து கடைகளை அமைப்பதால் போக்குவரத்து நெருக்கடியும், பிரச்னையும் உருவாகிறது.
சந்தை செயல்படுவதும், மூடப்படுவதும் வியாபாரிகள் கையில்தான் உள்ளது. வியாபாரிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். மீதமுள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.
வியாபாரிகள் சமூக இடைவெளியே பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். சந்தைக்கு வரும் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும் என்றனா்.