பொதுமுடக்கக் காலத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தொழிலாளா் சங்கத்தினா் திருவெறும்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் முருகேசன் தலைமையில் அளித்த மனு:
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலா் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனா். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலையில் 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு 55 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். மேலும் பொது முடக்க காலத்தில் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 நிவாரண உதவி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் நடராஜன் மற்றும் நிா்வாகிகள் சங்கிலிமுத்து, தெய்வநீதி ஆகியோா் உடனிருந்தனா்.