கால் நூற்றாண்டுக்கு பிறகு திருவரங்கத்தில் தடம் பதித்த திமுக!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலேயே அதிமுக-வின் கோட்டையாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விஐபி தொகுதியாகவும்
கால் நூற்றாண்டுக்கு பிறகு திருவரங்கத்தில் தடம் பதித்த திமுக!
கால் நூற்றாண்டுக்கு பிறகு திருவரங்கத்தில் தடம் பதித்த திமுக!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலேயே அதிமுக-வின் கோட்டையாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விஐபி தொகுதியாகவும் மாறிப்போன ஸ்ரீரங்கத்தில் கால் நூற்றாண்டு காலத்துக்கு பிறகு திமுக தடம் பதித்துள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு திமுக-வைச் சேர்ந்த டி.பி. மாயவன், 73,371 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதியை தோல்வியுறச் செய்து தொகுதியை கைப்பற்றினார்.

அதற்கு முன்பு 1997ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 3 முறை அதிமுக வெற்றி பெற்ற தொகுதி இது. அதிமுக-வைச் சேர்ந்த ஆர். செளந்தரராஜன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று தொகுதியை அதிமுக-வின் கோட்டை என அடையாளப்படுத்தியிருந்தார். பின்னர், 2001இல் கே.கே. பாலசுப்பிரமணியன், 2006இல் மு.பரஞ்ஜோதி, 2011இல் ஜெயலலிதா, 2016இல் எஸ்.வளர்மதி தொடர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2015இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக-வைச் சேர்ந்த எஸ்.வளர்மதி வெற்றி பெற்றார். இடைத் தேர்தலில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த திமுக வேட்பாளர் ஆனந்தை பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதியே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு அதிமுக-வின் எஃகு கோட்டையாக இருந்த தொகுதி.

முதல்வர் அந்தஸ்து தொகுதி: ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதால் முதல்வர் அந்தஸ்து கிடைத்து தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் வந்து சேர்ந்தன.

தேர்தல் பிரசாரத்துக்கு முதன்முறையாக வந்த ஜெயலலிதா பேசுகையில், ஸ்ரீரங்கம் எனது பூர்வீக ஊராகும். என்னுடைய குடும்ப முன்னோர்கள் இங்குதான் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், வாழ்ந்தார்கள். எனவே, ஸ்ரீரங்கத்துக்கு நான் வந்து செல்வது, எனது குடும்ப வீட்டுக்கு வந்து செல்வது போன்ற உணர்வைத் தருகிறது எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து தங்களது சொந்த மண்ணைச் சேர்ந்தவரை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தனர் தொகுதி மக்கள். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்தைவிட 41,488 வாக்குகள் பெற்று (மொத்தம் 1,05,328 வாக்குகள்) வெற்றி பெற்றார். இதனையடுத்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் வாய்ப்பை ஸ்ரீரங்கம் தொகுதி வழங்கியது.

இதற்கு நன்றிக்கடனாக மகளிர் தோட்டக்கலைக்கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகம், ஐஐஐடி, அரசு பொறியியல்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, யாத்ரி நிவாஸ், திருவானைக்கா ரயில்வே மேம்பாலம், கம்பரசம்பேட்டை தடுப்பணை, துணை மின்நிலையங்கள், கள்ளிக்குடி சந்தை, குளிர்சாதன வசதியுடன் கூடிய வாழை வணிக வளாகம், பள்ளிக் கட்டடங்கள், கிராமங்கள் முழுவதும் தார்ச்சாலைகள், சிமென்ட் சாலைகள், அரங்கநாதர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம், பசுமை வீடுகள், குடிநீர்த் திட்டங்கள் என அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வந்து தொகுதி மக்களை திக்குமுக்காடச் செய்தார். இதற்கு பிரதிபலனாக இரட்டை இலை சின்னத்தில் எவர் நின்றாலும் வெற்றியைத் தேடி தந்தனர் தொகுதி மக்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க தொகுதியை அதிமுக இழந்து நிற்கிறது. இதற்கு இரு அமைச்சர்களே பிரதான காரணம் என்கின்றனர் அதிமுக-வினர். தொகுதியின் அமைச்சரான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதியும், தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் குறிப்பிடும்படியாக செய்யவில்லை. குறைந்தபட்சம் தொகுதி மக்களை தன்வசப்படுத்தவில்லை. சுற்றுலாத்துரை அமைச்சரான வெல்லமண்டி என். நடராஜனும், மாவட்ட செயலர் பதவியை வகித்து மாவட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தவில்லை.

இதன்கராணமாக உள்ளாட்சித் தேர்தலிலேயே திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சித் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. இப்போது, மீண்டும் மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக திருவரங்கத்தை திமுக தட்டிப்பறித்துள்ளது என்றே கூற வேண்டும் என்கின்றனர் அதிமுக-வினர். மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை பெற்றாலும், ஸ்ரீரங்கத்தில் மட்டும் சிரமத்தை சந்திக்க நேரிட்டது. அதிமுக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் பல சுற்றுகளில் முன்னிலை பெற்றார். இறுதியில் திமுக வெற்றி பெற்றுவிட்டது.

எம். பழனியாண்டி
எம். பழனியாண்டி

மாவட்டத்தின் 9 தொகுதிகளில் திருச்சி மேற்கில் கே.என். நேரு, திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜ், திருவெறும்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீரங்கத்தில் எம். பழனியாண்டி, மண்ணச்சநல்லூரில் எஸ். கதிரவன், மணப்பாறையில் அப்துல் சமது (மமக), லால்குடி அ. செளந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின்குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன் என திமுக வேட்பாளர்களே வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இந்த வெற்றி குறித்து, திமுக முதன்மைச் செயலர் கே.என்.நேரு கூறுகையில், எல்லாப் புகழும் தலைவருக்கே (ஸ்டாலின்). திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். குறிப்பாக திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், உயக்கொண்டான் கால்வாய் சீரமைப்பு, குடிநீர்த்திட்டம், புதை சாக்கடை திட்டம் என திருச்சியின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எல்லாப் புகழும் தலைவருக்கே என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com