திருச்சி மாநகரில் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இ-பதிவுச் சான்று நகலை போலீஸாா் புதிய செயலி மூலம் சோதனை செய்கின்றனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி மாநகரில் போலீஸாா் 14 தற்காலிக சோதனைச் சாவடிகளும், 8 நிரந்தரச் சோதனை சாவடிகளும் அமைத்து வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.
மாநகரில் இதுவரை பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தது, தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணியாதது, பொதுமுடக்க விதிமீறல் குறித்து 8700 வழக்குகள் பதியப்பட்டு, இ-பதிவு இல்லாத 2800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாகனங்களில் வருவோா் வைத்துள்ள இ-பதிவு உண்மையா என்பது குறித்து அறிய புதிய செயலியைப் பயன்படுத்தி மாநகரில் உள்ள போலீஸாா் 50 பிரத்யோக செல்லிடப்பேசிகள் மூலம் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள இ-பதிவு குறித்து சோதனை செய்கின்றனா்.
மேலும் மாநகரில் இ-பதிவு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் வருவோா் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி மாநகரில் முக்கிய சாலைகளான டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம், மேலப்புதூா், மரக்கடை, பாலக்கரை, தென்னூா், தில்லைநகா், உறையூா் ஆகிய இடங்களில் தடுப்புகள் கொண்டு ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டு வாகனச் சோதனை நடைபெறுகிறது.
2 முறைக்கு மேல் சோதனையில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 400 போலீஸாா் வீதம் மூன்று ஷீப்டுகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனா்.