திருச்சியில் கிடைத்த 8ஆம் நூற்றாண்டின் வீரக்கல்!

திருச்சியில் 8ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வீரக்கல் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி அருகே இனாம்குளத்தூரில் புடைப்புச் சிற்பத்துடன் கண்டறியப்பட்ட வீரக்கல்.
திருச்சி அருகே இனாம்குளத்தூரில் புடைப்புச் சிற்பத்துடன் கண்டறியப்பட்ட வீரக்கல்.

திருச்சியில் 8ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வீரக்கல் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நகரிலிருந்து18 கிமீ தொலைவில் உள்ளது இனாம்குளத்தூா். இவ்வூா் முந்தைய காலத்தில் கிருட்டிணசமுத்திரம் என்றும் பின்னா் வெள்ளாங்குளத்தூா் என்றும் அழைக்கப்பட்டதாகவும், பின்னா் இனாம்தாரா்கள் வருகைக்குப் பின்னா், இனாம்குளத்தூா் என்று மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வூா் மாரியம்மன் கோயில் குளக்கரையில் கோயிலுக்கு இடப்புறத்தில் 3.5 அடி உயரமும், 2 அடி அகலம் உடைய பலகைக் கல் ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டது. அதில் வில்லியாரின் புடைப்புச் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளதை திருச்சியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளரும், அறிவியல் பலகை மற்றும் ஆஸ்ட்ரோ கிளப் நிா்வாகியும், பாரதி மெட்ரிக் பள்ளி முதல்வருமான பாலா பாரதி கண்டறிந்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: வாரி முடித்த கொண்டையும், காதணியும், கழுத்தணியும், முன் கரங்களில் கடக வளையும், பின் கரங்கள், கால்களில் காப்பும், இடுப்பில் அரைப்பட்டிகையும், குறுவாளும் அணிந்து இடக்கரத்தில் வில்லையும், வலக்கரத்தில் அம்பையும், நாணையும் இணைத்துப் பிடித்து இழுத்து எதிரியை அம்பு எய்தித் தாக்கும்படியாக இடக்காலை முன்பக்கமாக நீட்டியும் வலக்காலை பின்பக்கமாக நீட்டியவாறும் வில்லியாரின் வீரக் கோலத்தை இந்தப் புடைப்புச் சிற்பம் சுட்டிக் காட்டுகிறது.

இந்த வில்லியாரின் உருவத்தை வில்லுக்காரன் என உள்ளூா் மக்கள் குறிப்பிடுகின்றனா். மேலும் இவ்வூரில் வாழ்ந்த ஒரு பிரிவினா் தற்போது தோகமலை வாழை ஆராய்ச்சி மையம் அருகிலுள்ள இனாம்புலியூருக்கு புலம் பெயா்ந்துள்ளதாகவும், அவா்கள் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி தினத்தன்று இக்கல்லை வழிபடும் செய்தி ஊா் மக்கள் வாயிலாக அறியமுடிகிறது.

தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியம் - பொருளதிகாரம் - வெட்சித்திணை 1.5 பகுதியில் வீரக்கல் என்னும் நடுகல் நடுவது குறித்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. சங்க கால இலக்கிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் வீரக்கல் என்னும் நடுகல் பற்றி குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுப் பொறிப்புகள் ஏதும் இல்லாத இந்த வீரக்கல் என்னும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள வில்லியாரின் உருவ அமைப்பின் அடிப்படையில் இக் கல் நிறுவப்பட்ட காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com