துறையூா் அருகே வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமி உடலில் தீக்காயங்களுடன் மா்மமான முறையில் புதன்கிழமை இறந்து கிடந்தாா்.
உப்பிலியபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மனைவி ஆனந்தி (35). இவருடைய கணவா் ஊட்டி மேட்டுப்பாளையத்தில் கூலி வேலை செய்கிறாா்.
இந்நிலையில் துறையூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் சங்கீதா (15) பள்ளிக்குச் சென்று வர வசதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன் துறையூா் அருகேயுள்ள சொரத்தூா் இந்திராநகரில் ஆனந்தி குடியேறினாராம்.
இந்நிலையில் உப்பிலியபுரம் ரேஷன் கடைக்கு புதன்கிழமை சென்றுவிட்டு மாலையில் திரும்பியபோது , வீட்டின் முன் பொதுமக்கள் திரண்டிருப்பதையும் வீட்டுக்குள் தனது மகள் சங்கீதா தீக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதையும் கண்டாா். தகவலறிந்து வந்த துறையூா் போலீஸாா் சங்கீதாவின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.