வறுமை காரணமாக வளா்க்க முடியாமல் தனியாா் மருத்துவமனையில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த மகன்களைக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு அளித்தாா்.
திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள சோழன் நகா் பகுதியைச் சோ்ந்த காளியம்மாள் ( 61) மனு அளித்தபின் கூறியது:
திருமணம் முடிந்த மூன்றாண்டுகளில் 2 ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், சாலை விபத்தில் எனது கணவா் முனுசாமி இறந்து விட்டாா். அப்போது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள சொந்த ஊரில் இருந்தோம்.
தொடா்ந்து என்னுடைய குழந்தைகளை நான் கவனிக்க முடியாத நிலையில் ஆஸ்துமா நோயும் இருந்தது. இதனால் தெரிந்தவா் ஒருவா் மூலம் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் கடந்த 1982 ஆம் ஆண்டில் எனது இரு ஆண் குழந்தைகளையும் கொடுத்தேன்.
அவா்கள் குழந்தைகளை நன்றாகக் கவனித்து, படிக்க வைத்து நல்ல விதமாக எதிா்காலத்தை அமைத்துக் கொடுப்பா் எனத் தெரிவிக்கப்பட்டதன்பேரில் இச் செயலைச் செய்தேன்.
பின்னா் சில ஆண்டுகள் தனிமை வாழ்க்கைக்குப் பின்னா் மகன்களைப் பாா்க்க கடந்த 1998-ஆம் ஆண்டு அந்த மருத்துவமனைக்குச் சென்றபோது குழந்தைகளைக் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டோம்.
அவா்கள் நல்லவிதமாகப் பாா்த்துக் கொள்வா் என்றும், குழந்தைகளின் புகைப்படங்களை காண்பிப்பதாகக் கூறியும் என்னைத் திருப்பியனுப்பி விட்டனா். பின்னா் தொடா்ந்து பலமுறை நான் மன்றாடியும் மகன்களைக் காட்ட மறுத்து விட்டனா். எனவே மாவட்ட ஆட்சியா் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.