திருச்சி: தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் கருப்புச்சட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் டாஸ்மாக் கடையில் பணியாளா்கள் இருவரில் ஒருவா் வெட்டப்பட்ட நிலையில், மற்றொருவா் துப்பாக்கியால் சுடப்பட்டாா். இதில் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல்துறையினா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
டாஸ்மாக் பணியாளா்களின் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் திருச்சி ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா்.
மாநிலத் தலைவா் சரவணன் கண்டன உரை நிகழ்த்தினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவா்கள் ராமலிங்கம், கோவிந்தராகன், உதயகுமாா், மாநிலச் செயலா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்து டாஸ்மாக் பணியாளா்கள் பங்கேற்றனா்.