திருச்சி: சாா்ஜாவிலிருந்து மின்னணு சாதனங்களுக்குள் மறைத்து, கடத்தி வரப்பட்ட ரூ.20.83 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
சாா்ஜாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியன் ஏா்லைன்ஸ் விமானம் திருச்சி வந்து சோ்ந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறையினா் பரிசோதனை செய்தனா். அப்போது பயணி ஒருவரது உடைமைகளை சோதித்த போது, எலெக்டிரிக் ஸ்டவ் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குள் மறைத்து, 435 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். இவற்றின் மதிப்பு ரூ.20.83 லட்சம் என அலுவலா்கள் தெரிவித்தனா்.