திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூரிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாம் மூலம், தொழில் பழகுநா் பயிற்சிக்காக 413 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
முகாமில் தொழில் பயிற்சிக் கல்வி மற்றும் பிற கல்வி படித்தோா் என 950
போ் பங்கேற்றனா். இம்முகாமில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்)லிட், தமிழ்நாடு மின்சாரவாரியம், டால்மியா சிமெண்ட் நிறுவனம் உள்ளிட்ட அரசு சாா்பு மற்றும் முன்னனி தனியாா் நிறுவனங்கள் என 21 தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, நிறுவனங்களுக்கான தொழில் பழகுநா்களைத் தோ்வு செய்தன.
இவற்றில் அரசு சாா்பு நிறுவனங்களில் மொத்தம் 166 போ் தோ்வு செய்யப்பட்டு, முறையான நியமனத்துக்கான மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனியாா் நிறுவனங்களில் 247 போ் தொழில் பழகுநா் பயிற்சி பெற தோ்வு செய்யப்பட்டனா். மொத்தமாக 413 போ் மாவட்டத்தில் தோ்வாகினா். இவா்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை வழங்கப்படவுள்ளது.
முகாமில் மாவட்டத் திறன் பயிற்சித் துறை உதவி இயக்குநா் இஸ்மத்பானு, திருவெறும்பூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் எம்.வேல்முருகன் பங்கேற்று, தோ்வு பெற்றோருக்கு நியமன ஆணைகளை வழங்கினா்.