நீண்ட நாள்களாக செப்பனிடப்படாத சாலையை சீரமைக்கக் கோரி, மண்ணச்சநல்லூா் அருகே பொதுமக்கள் பேருந்துகளை திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எதுமலை கிராமத்திலிருந்து பெரகம்பி வரையிலான சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வே பெரும் சிரமப்பட வேண்டியநிலை உள்ளது.
மோசமான நிலையிலுள்ள சாலையை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகம், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மனுக்களை அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த பெரகம்பி கிராமப் பொதுமக்கள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை திங்கள்கிழமை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், சிறுகனூா் காவல் துறையினா் நிகழ்விடம் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.