மணப்பாறை தமிழ்நாடு செய்தித்தாள், காகித ஆலையில் பணிக்கு வந்த பணியாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனம் (அலகு 2) செயல்பட்டு வருகிறது. சுமார் 1500 பணியாளர்கள் நேரடியாகவும், 2000 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இதில் திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த கருப்பன் மகன் பாலமுருகன்(38) என்பவர் பாய்லர் ஆப்ரேட்டராக எனர்ஜி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 5.50 மணியளவில் முதல் ஸிப்ட் பணிக்காக ஆலைக்குள் வந்த பாலமுருகன், தனது வருகையினை ஆலை முகப்பில் பதிவு செய்துவிட்டு நடந்து சென்ற போது வழியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைக்கண்ட ஆலை பாதுகாவலர்கள் மற்றும் சகப்பணியாளர்கள் ஆலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் பணியில் இல்லாத நிலையில், பாலமுருகனை பணியிலிருந்த செவிலியர் பரிசோதனை செய்து நாடி துடிப்பு குறைந்து வருவதாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க- கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
அதனைத்தொடர்ந்து மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பாலமுருகன் வழியிலேயே உயிரிழந்ததாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கூறியுள்ளனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் பாலமுருகன் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலையில் இரவு பணியின்போது (இரவு 10 மணி முதல் காலை 6 வரையிலான ஸிப்டில்) ஆலை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியமர்த்தாதது தான் பாலமுருகன் உயிரிழப்பிற்கு காரணமாக சகப்பணியாளர்களும், உறவினர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.