திருச்சியில் மாநகராட்சியில் விரிவாக்கத்தை ஒட்டி, புதியதாக பகுதிகள் இணைக்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை தற்போது விரிவாக்கம் செய்து 100 வார்டுகளாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
புதிதாக இணைக்கப்படும் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால், புதிதாக இணைக்கப்படவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி குண்டூர், அய்யம்பட்டி, திருவளர்ச்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில், திங்கள்கிழமை போராட்டம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.