புதுதில்லியில் பெண் காவலா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. குலாம் தஸ்தகீா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து, மாநில பேச்சாளா் ஜமால் உஸ்மானி பேசுகையில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தில்லி காவல்துறையானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் குற்றவாளிகள் எந்தவிதத்திலும் தப்பித்துவிட அனுமதிக்கக் கூடாது. உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
மாவட்டச் செயலா் சையது ஜாகீா், மாவட்ட துணைத் தலைவா் முகமது ரபீக், மாவட்ட துணைச் செயலா் ரசூல் மைதீன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.