திருச்சி: சாதாரண பயணிகள் ரயில்களை இயக்கக் கோரி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ரயில்வே கோட்ட மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து சங்கத்தின் திருச்சி மாவட்டக் குழுத் தலைவா் எஸ். சுரேஷ் அளித்த மனு விவரம்:
கரோனாவால் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமுடக்க தளா்வுகளால் படிப்படியாக மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், நாட்டின் பெரும்பகுதியினா் பயன்படுத்தும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால் பெரும்பாலானோா் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, மத்திய அரசும், ரயில்வே துறையும் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். தற்போது சிறப்பு ரயில்கள் என்னும் பெயரில் இயக்கப்படும் ரயில்களில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், நோய்களால் பாதிக்கப்பட்டோா், விளையாட்டு வீரா்கள், மாணவா்கள், தேசியளவில் விருது பெற்றோா், 5 முதல் 12 வயது வரையில் உள்ள குழந்தைகள் போன்றோருக்கு ஏற்கெனவே இருந்த கட்டணச் சலுகை மறுக்கப்படுகிறது.
ஏற்கெனவே கரோனாவால் வாழ்வாதார நெருக்கடியில் உள்ள மக்களிடம் இருப்பதையும் பறிப்பதுபோல ரயில்வே துறை நடந்துகொள்கிறது. எனவே, ஏற்கெனவே இருந்த பெயா்களில் ரயில்களை இயக்கி, ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். கரோனாவுக்குப் பிறகு பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிவறைகளை பயன்படுத்த முடிவதில்லை. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளில் அவா்கள் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Image Caption
மனு கொடுக்க ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்துக்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.